பண்டைக் காலத்தில் தமிழில் உரைநடை இல்லையென்றே சொல்லலாம். அனைத்தும் செய்யுளிலேயே இருந்தது. இலக்கியங்கள், இலக்கண நூல்கள் யாவும் செய்யுளிலேயே இருந்தன. தொல்காப்பியம் செய்யுளை அடிப்படையாகக் கொண்டதுதான்.
நன்னூல் கூட செய்யுள்தான். ஆங்காங்கே உரைநடை பற்றிய ஓரிரு கருத்துகள் வருமே தவிர அவர்கள் செய்யுளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். மருத்துவ நூல்கள் முதல் அரசு அறிவிப்புகள் வரை அனைத்துமே செய்யுளாகவே இருந்தது. ஜோதிடமும் செய்யுள்தான். அகராதியே செய்யுளில்தான் இருந்தது. அதற்கு நிகண்டு என்று பெயர்.
இப்போது செய்யுளிருந்து உரைநடைக்கு மாறியிருக்கின்ற எழுத்து முறைகளைக் காணலாம். செய்யுள் எவ்வாறு அமையவேண்டும், அதன் வகைகள், விதிகள் என்று இலக்கணம் வகுத்து தமிழ் மொழியை செம்மொழியாக்கினார்கள். இன்று உரைநடை உலகத்தில் இருக்கிறொம். உரைநடைக்கென்று ஒரு தெளிவான நடைமுறை இன்று இல்லை. ஆகவே பள்ளியில் படிக்கின்ற போதே மாணவர்க்கு உரையாடல் எவ்வாறு இருத்தல் வேண்டும்; எப்படி பத்தி அமைத்து எழுதுதல் வேண்டும்; மொழிபெயர்ப்பு அமைதல் எவ்விதம் போன்ற செய்திகளை உணர்த்திட வேண்டும். சொந்தமாக சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகக்குறைவாகவே மாணவர்களிடத்தில் காணப்படுகிறது. தெளிவான வாக்கிய அமைப்புகளுடன் சரியான சொற்களையிட்டு பேசுகின்ற எழுதுகின்ற ஆற்றலை வளர்க்க வேண்டும்.